புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது. இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் அவரை துரோகியாகச் சித்தரித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் எழுதினர். இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் உள்பட பிரபலங்கள் பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘இந்திய கிரிக்கெட் வீரரை இழிவுபடுத்தும் பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். எங்களுடைய விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். சமூகவலைத்தளங்களில் தொல்லைகளில் இருந்து பிரபலங்களைப் பாதுகாப்பது தொடர்பான எங்களுடைய விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.