திருவாரூர்: திருவாரூர் தியாகராயர் கோவில் கமலாலய குளத்தின் ஒரு கரை தொடர் மழை காரணமாக சரிந்து விழுந்தது. இதனை அறிந்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கமலாலய குளத்தை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கமலாலய குளத்தின் கரை சரிந்து விழுந்தது குறித்த விவகாரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அதனை சீரமைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவித்தார். கமலாலய குளத்தின் மதில் சுவர்களில் உறுதி தன்மை குறித்து நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்தவுடன் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கும் சிலைகள் மீட்கப்பட்டிருப்பது குறித்தும் சிலை கடத்தலை தடுத்திருப்பது தொடர்பாகவும் விவரங்கள் வெளியிடப்படும் என்று இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார்.