சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெ.விஜயா ராணி தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொது மக்களிடமிருந்து 132 மனுக்கள் பெறப்பட்டது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெ.விஜயா ராணி தலைமையில் நடந்தது. மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பொதுமக்களின் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கனை மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டார்.
மேலும் பெறப்பட்ட தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு, கலெக்டர் விஜயா ராணி அறிவுறுத்தினார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சாலை விபத்து நிவாரண நிதியுதவி, விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.10,20,000 மதிப்புள்ள நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ப.டினாகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நாத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கியூரி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.