×

முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைத்ததற்காக ரயில்வே அமைச்சருக்கு நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை: சிறப்பு விரைவு இரயில் வண்டிகளில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதற்கு ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்குள் ஓடும் விரைவு வண்டிகளிலும் பொதுப் பெட்டிகளை விரைந்து இணைத்திட கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறப்பு விரைவு ரயில் வண்டிகளில் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தியா முழுவதற்கும் ரயில்வே மண்டலங்களுக்குள் ஓடும் விரைவு ரயில்களில் மட்டும் பொது பெட்டிகளை இணைத்திட முடிவெடுத்துள்ளது. முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்குவதற்கு கவுண்டர்களை திறக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் முதல் தேதி முதல் கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்பாக உள்ள 23 விரைவு வண்டிகளில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் சிலவற்றை பொது பெட்டிகளாக மாற்றி நவம்பர் முதல் தேதி முதல் அமலாக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. அதேபோல நவம்பர் பத்தாம் தேதி முதல் நான்கு வண்டிகளில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளை பொதுப் பெட்டிகள் ஆக மாற்றி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கும் அதே நேரத்தில் தமிழகத்திற்குள் ஓடும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் உடனடியாக பொது பெட்டிகளை இணைத்திட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரயில்வே மண்டலங்களை தாண்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற ஊர்களுக்கு செல்லும் சிறப்பு விரைவு வண்டிகளிலும் பொது பெட்டிகளை இணைத்திடவும் வலியுறுத்தியுள்ளார்.

புறநகர ரயில் வண்டிகள் எப்போது விரைவு வண்டிகளில் பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுகிறதோ அப்போது முதல் இயல்புநிலைக்கு திரும்பும் என்று ரயில்வே வாரியம் முன்பு அறிவித்திருந்தது. இப்போது பொது பெட்டிகளை விரைவு வண்டிகளில் இணத்திட முடிவெடுத்த அதே கையோடு புறநகர வண்டிகளையும் இயல்பு நிலைக்கு இயக்கிட கோரியுள்ளார். முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட விரைவு ரயில் வண்டிகளை இயக்கியது போல சாதாரண பயணி வண்டிகளையும் இயக்கிட மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Minister ,S. Venkatesh , S. Venkatesan
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...