×

நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரிக்கை: இந்திய தேர்தல்களில் பேஸ்புக் செல்வாக்கு: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: `இந்திய தேர்தல்களில் பேஸ்புக் செல்வாக்கு செலுத்துகிறது. இதனால் ஜனநாயகம் குறைத்து மதிப்பிடப்படுகிறது,’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும்,  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை கோரி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது: பேஸ்புக்கில் லட்சக்கணக்கான போலி கணக்குகள் இருப்பது பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டும், அது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக பொய்யான தகவல்கள், வெறுக்கத்தக்க பேச்சுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இடம் பெற செய்வதன் மூலம், நமது ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடவும், சமரசம் செய்து கொள்ளவும் வழி வகுத்துள்ளது. பேஸ்புக்கின் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் பாஜ தொண்டர்கள், அதன் கூட்டணியினர் உட்புகுந்துள்ளனர். பேஸ்புக் பொய்யான படங்கள், செய்திகளை பதிவிட அனுமதிப்பதன் அவசியம் என்ன?  இதுவரை, வெறும் 0.2 சதவீதம் வெறுக்கத்தக்க பேச்சுகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இந்தி, வங்க மொழியிலான பேச்சுகள் இன்னும் நீக்கப்படவில்லை.

அதற்கான சாப்ட்வேர் இல்லையா? டெல்லி வன்முறை, மேற்கு வங்க தேர்தல் ஆகியவற்றில் பேஸ்புக்கிற்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய தேர்தல்களில் வாக்காளர்களிடையே பேஸ்புக் ஆதிக்கம், செல்வாக்கு மூலம் தலையிடுவதாக ஏன் குற்றம் சுமத்தக் கூடாது. இது இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு நிறுவனம் முறைகேடு செய்துள்ளதற்கான ஆதாரம் ஆகும். டிவிட்டர் சமூக வலைதளத்தின் மீது பாதுகாப்பு கொள்கைகள் என்ற பெயரில் துளைத்து எடுத்த ஒன்றிய அரசு, பேஸ்புக் விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? பேஸ்புக் இந்தியா நிறுவனம் பாஜ.வின் கூட்டாளியாக செயல்படுகிறது. எனவே, இந்திய தேர்தல்களில் பேஸ்புக் தலையீடு, செல்வாக்கு குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய பேஸ்புக் செய்தி தொடர்பாளர், ``இந்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள வெறுக்கத்தக்க பேச்சுகளை கண்டறிவதற்கான சாப்ட்வேர்களுக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கணிசமான வெறுக்கத்தக்க பேச்சுகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது, முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்டோர் குறித்த வெறுக்கத்தக்க பேச்சுகள் உள்பட 0.05 சதவீதம் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதற்கான பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டதும், விரைவில் அவை நீக்கப்பட உள்ளன,’’ என்று தெரிவித்தார்.

பொறுப்புணர்வு நிர்ணயித்தல்
இந்திய தேசிய மக்கள் ஊடகத் தொடர்பு மாணவர்களிடையே உரையாற்றிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ``சமூகத்தில் தவறான தகவல்கள், செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமாகும். அச்சு ஊடகங்களைப் போன்று சமூக ஊடகங்களின் பொறுப்புணர்வு நிர்ணயிக்கப்பட வேண்டும்,’’ என்று கூறினார்.

Tags : Parliamentary ,Committee ,Facebook ,Indian Elections ,Congress , Congress, indictment
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 13...