குயின்ஸ்லாந்து: ஆஸி. ஓபனில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு, வீரர்கள் எதிர்ப்பு காரணமாக ‘ஊசி போடாதவர்கள் 14 நாள் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும்’ என்று மாற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான ஆஸி. ஓபன் தொடர் (ஜன.17 - ஜன.30) மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ள நிலையில், ‘கொரோனா தடுப்பூசி 2 முறை போட்டவர்களுக்கு மட்டுமே மெல்போர்ன் போட்டியில் பங்கேற்க அனுமதி’ என்று குயின்ஸ்லாந்து மாகாண அரசு கடந்த வாரம் அறிவித்தது.
இந்த முடிவுக்கு முன்னணி டென்னிஸ் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். நம்பர் 1 வீரரும், நடப்பு ஆஸி. ஓபன் சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா) கூறுகையில், ‘தடுப்பூசி போடுவதும், மறுப்பதும் தனி மனித உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. நான் தடுப்பூசி போட்டேனா, இல்லையா என்பதைக் கூட யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸி. ஓபனில் பங்கேற்பேனா என்பதை இப்போதே சொல்ல முடியாது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், வீரர்களின் அதிருப்தி காரணமாக ‘கட்டாய தடுப்பூசி’ விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதன்படி ஆஸி. ஓபனில் பங்கேற்பவர்கள் 2 கட்ட தடுப்பூசி போடாவிட்டால், 14 நாட்கள் கட்டாயமாக ‘குவாரன்டைனில்’ இருக்க வேண்டும் என வீரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.