சென்னை: கண்ணில் பட்டதையெல்லாம் விற்கின்ற ஒரு மோசமான அரசாக ஒன்றிய அரசு உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேற்று பெரம்பூர் கேரேஜ் ஒர்க் ஷாப்பை பார்வையிட்டு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு டிஆர்இயூ சார்பில் ரயில்வே சொத்துகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நடந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சின்னச்சின்ன மாநகராட்சிகள் கூட பள்ளிகளை நடத்துகின்றன. ஆனால் இவ்வளவு பெரிய ரயில்வே நிர்வாகத்தால் பள்ளிகளை நடத்த முடியாமல் தனியாருக்கு விற்கின்ற முடிவிற்கு வந்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே ரயில்வே பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்காமல் ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும். கண்ணில் படுவதை எல்லாம் விற்பது என்ற முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களை கூட விற்கும் நிலைமைக்கு இன்று ஒன்றிய அரசு வந்துள்ளது. இது நாட்டு நலன் சார்ந்து நடக்கின்ற விஷயமல்ல, என கூறினார்.