×

தேசபக்தி என்ற பெயரில் பொய் வழக்கு, பண மோசடி நடைபெறுகிறது!: ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக சிவசேனா விமர்சனம்..!!

மும்பை: தேசபக்தி என்ற பெயரில் பொய் வழக்குகள் போடப்பட்டு சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை விடுவிக்க 25 கோடி ரூபாய் வரை அதிகாரிகள் பேரம் பேசியதாக முக்கிய சாட்சியான பிரபாகர் குற்றம்சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசபக்தி என்ற பெயரில் பொய் வழக்குகள் போடப்பட்டு சிலர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான ஷாம் டிசூசோ, மிகப்பெரிய அளவில் பணமோசடியில் ஈடுபடும் நபர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தற்போது வெளிவரும் தகவல்கள் வெறும் தொடக்கம் தான் என்றும் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே ஆர்யன் கானை விடுவிப்பது தொடர்பாக பேரம் பேசிய புகாரில் குற்றம்சாட்டப்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான சமீர் வாங்கடே சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தவறான நோக்கத்துடன் தான் கைது செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Tags : Shivchena ,Aryan Khan , Patriotism, lying, money laundering, Shiv Sena
× RELATED போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு:...