பாணாவரம் : பாணாவரம் பகுதியில் சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளைக்கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் சர்வீஸ் சாலை அருகே காவல் நிலையம், தனியார் வங்கிகள், கடைகள் உள்ளன. இவ்வழியாக கடைவீதி, வங்கி, காவல் நிலையம், ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள சர்வீஸ் சாலையோரத்தில் தனியார் வங்கி அருகே மூடப்படாமல் திறந்த நிலையில் ஆழ்துளைக்கிணறு ஒன்று உள்ளது. தனியார் சிலர் சொந்த உபயோகத்திற்காக அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து, அதை மூடாமல் விட்டுள்ளனர். இதனால், அங்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணறுகளில் சிறுவர்கள் தவறி விழுந்து, மீட்பு நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே, பாணாவரம் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, ஆபத்தான ஆழ்துளை கிணற்றை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.