நொய்டா: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் வீரதீர செயல்புரிந்த இந்திய - திபெத் எல்லை போலீசார் 20 பேருக்கு வீரதீரத்துக்கான பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா - சீனா இடையிலான அசல் கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ளது. இங்கு இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராணுவத்துடன் சேர்ந்து இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர் பணியாற்றி வருகின்றனர்.
இப்படையை சேர்ந்த போலீசார் கடந்தாண்டு மே-ஜூன் மாதங்களில் கல்வான் நல்லாவில் நடந்த பதற்றமான நிலையை நுட்பமாக கையாண்டதற்காக 20 போலீசாரை ஒன்றிய அரசு வீரதீர பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது. இந்த படையின் 60வது எழுச்சி நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை விவகாரத்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கலந்து கொண்டு 20 போலீசாருக்கும் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.