×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்தது. தொடர்ந்து இதில் பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றியை பெற்றது. வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்று கொண்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது வெற்றி பெற்றவர்கள் அனைவரும் சிறப்பாக பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த சந்திப்பின் போது பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர் பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.

Tags : MK Stalin , Rural local elections, victory, MK Stalin, congratulations
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...