×

திருச்செந்தூர் கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு சுவாமி தங்கத்தேரில் கிரிவலம்: பக்தர்கள் மகிழ்ச்சி

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கத்தேர் ஓடியது. பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கொரோனா 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஏப்.24ல் இருந்து தங்கத்தேர் ஓடவில்லை. தொற்று படிப்படியாக குறைந்ததால் ஜூலை 5 முதல் வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி மாலை 5 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். 6 மாதத்திற்கு பிறகு தங்கத்தேர் ஓட்டத்தில் கோயில் இணை ஆணையர் அன்புமணி, அவரது மகள் குறிஞ்சிமலர் உட்பட பலர் பங்கேற்றனர். தங்கத்தேர் கிரிபிரகாரம் வலம் வந்து 6.15 மணிக்கு நிலைக்கு வந்தது. இன்று முதல்பக்தர்கள் ரூ.2500 கட்டணம் செலுத்தி தங்கத்தேர் இழுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Swami ,Thangatheril Kirivalam ,Thiruchendur Temple , Thiruchendur, Temple, Swami, Kirivalam, Devotees, Happiness
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்