×

திருப்புத்தூரில் மருதுபாண்டியர்கள் 220வது குருபூஜை அமைச்சர், எம்எல்ஏக்கள் மரியாதை

திருப்புத்தூர்: மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு திருப்புத்தூர் அரசு நினைவுமண்டபத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாமன்னர் மருதுபாண்டியர்களின் 220வது நினைவுதினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உள்ள அரசு நினைவு மண்டபத்தில் நேற்று காலை மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் குழு தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசிய கொடியேற்றி வைத்து, மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் நினைவு மண்டபத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும், பேருந்து நிலையம் எதிரே உள்ள நினைவு ஸ்தூபிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் திமுக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், காமராஜ், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், கோகுலஇந்திரா, காங்கிரஸ் சார்பில் எம்பிக்கள் திருநாவுக்கரசர், கார்த்திக் சிதம்பரம், மற்றும் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

Tags : Maruthupandiyar ,Gurupuja ,Minister ,Tiruputhur , Tiruputhur, Maruthupandiyar, Gurupuja, Minister, MLA,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...