ராஜபாளையம்: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி 17ம் தேதி தி.நகரிலுள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி தொண்டர்களுக்கு சசிகலா இனிப்பு வழங்கினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதையடுத்து `சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலா கட்சியில் கிடையாது’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்த அமமுக தொண்டரான சிங்கராஜ் (35), சசிகலாவை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வலியுறுத்தி ராஜபாளையம் மலையடிபட்டியிலுள்ள செல்போன் டவரில் ஏறி நேற்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். 40 அடி உயர டவரில் 20 அடி தூரம் வரை ஏறிய சிங்கராஜிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எடப்பாடி பழனிசாமியை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என்றார். 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை போலீசார் கீழே இறங்க செய்தனர். பின்னர் விசாரணைக்காக சிங்கராஜை வடக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.