×

நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 சதவீதம் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி முடிந்தது: கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

சென்னை: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி  நூறு சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின்கீழ்க் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து நூறு சதவிகித மானியத்தில் இலவசமாக ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.      ஆண்டுதோறும் இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஒன்றிய அரசு கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது காரணமாக கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்வதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

எனினும் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனைகளின் குளிர்பதன அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்து கையிருப்பினைக் கொண்டு, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறு சதவிகிதம் தடுப்பூசிப்பணி நிறைவடைந்துள்ளது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களான தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கோமாரி நோய் அதிகம் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுமார் 2.68 லட்சம் அளவில் கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடப்பட்டுள்ளது.

தற்போது ஒன்றிய அரசு மூலம் 13.79 லட்சம் அளவில் கோமாரி தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது.  இதன் மூலம் சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்து பெற்று வழங்க  தமிழக அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  விரைவில் கோமாரி தடுப்பு மருந்து ஒன்றிய அரசு மூலம் பெறப்பட்டுக் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Nilgiris ,Kanyakumari ,Animal Husbandry Department , Nilgiris, Kanyakumari, syphilis, vaccination, veterinary care
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல்...