சென்னை: சென்னை அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (39), இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். பின்னர், கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார். இந்நிலையில், சுதர்சன் நண்பரின் உறவினருக்கு சொந்தமாக மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்கள் 7 பேருடன் வந்து தங்கி உள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சுதர்சன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, இரண்டாவது மாடியில் கீழே இறங்கிய சுதர்சன் தவறி தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுதர்சனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து, சுதர்சன் மது போதையில் தவறி விழுந்தாரா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.