சென்னை: ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். அதில் ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக, அதன்மீது மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த பயிற்சி, அக்டோபர் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை இணையவழி நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.எனவே, இந்த பயிற்சியை இந்தியில் மட்டும் நடத்துவதை கண்டிக்கிறேன். அதனை தமிழிலும் அதைப்போன்று இந்தி இல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும். அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.