×

சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை வெளியிட்ட வழக்கு: பாஜ செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் ஜாமீன் மனு: போலீஸ் பதில் தர செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிவிட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜ செயற்குழு  உறுப்பினர் கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜ செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டிவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, கடந்த 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர். அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனுதாக்கல் செய்தார். மனுவில், இரண்டு மாதங்களுக்கு முன் அரசியல் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பதிவுகளால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத நிலையில் தன்னை அழைத்து விசாரிக்காமல் கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய குற்றப்பிரிவு தரப்பில் மாநகர அரசு வக்கீல் ஜி.தேவராஜன் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் தர கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : Twitter ,BJP ,Kalyanaraman , BJP executive committee member, bail petition
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு