×

லக்கிம்பூர் கொலை வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு டெங்கு: மருத்துவமனையில் அட்மிட்

லக்கிம்பூர்: லக்கிம்பூர் கொலை வழக்கில் கைதான ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரில் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா, போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கூடுதல் எஸ்பி அருண்குமார் சிங்  கூறுகையில், ‘ஆஷிஷ் மிஸ்ரா உட்பட நான்கு குற்றவாளிகள் இரண்டு நாள் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களில் ஆஷிஷ் மிஷ்ராவுக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயில் இருந்து குணமடைந்த பின்னர், அவர் மீண்டும் ரிமாண்ட் செய்யப்படுவார். உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அவரை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.



Tags : Union minister ,Luckimpur , Dengue for Union Minister's son arrested in Lakhimpur murder case: Admitted to hospital
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...