×

குடும்ப தகராறில் விபரீதம் வாலிபர் வெட்டிக்கொலை: உறவினர் உள்பட 3 பேர் கைது

புழல்:  பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (27). இவர், புழல் அடுத்த புத்தாகரத்தில் வசிக்கும் தாய்மாமன் முருகவேல் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி, சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆறுமுகம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், புத்தாகரம் சுபாஷ் நகர் முதல் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு,  வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக புழல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக கிடந்தது ஆறுமுகம் என தெரியவந்தது. இதையடுத்து, அவரது தாய்மாமன் முருகவேலை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: முருகவேல், கடந்த வாரம் மது போதையில் தாய்மாமன் முருகவேலிடம்  தகராறு செய்துள்ளார். இதுபற்றி முருகவேல் தனது மகனும், கல்லூரி மாணவனுமாகிய அஜித்குமாரிடம் (21) தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தனது நண்பர்களான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராஜேஷ்குமார் (19), டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் (21) ஆகியோருடன் சேர்ந்து, ஆறுமுகத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை குரோம்பேட்டையில் பதுங்கியிருந்த அஜித்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : In the dispute, Valipar, murder, 3 persons, arrested
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...