சென்னை: ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்த செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார், மதுராந்தகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட சென்றார்.அப்போது, எஸ்பியை வரவேற்க, இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வேகமாக ஓடி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு திடீரென காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது.
இதில் வலியால் துடித்த அவர், கால்களை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார். இதை கண்டதும், எஸ்பி விஜயகுமார், உடனடியாக அவரது கால்களை பிடித்து,முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், காவல்துறை வாகனத்தில் அவரை அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டவுடன், தானொரு எஸ்பி என்பதையும் மனதில் கொள்ளாமல், பொது இடத்தில் சிகிச்சையளித்த எஸ்பியின் செயல், அனைத்து போலீசாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.