சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு இந்தியன் வங்கி சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் மாதம் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கம் உட்பட 19 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். அதில் 9 வீரர்கள் உட்பட 10 பேருக்கு இந்தியன் வங்கி சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
தங்கப்பதக்கம் வென்ற சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), கிருஷ்ணா நாகர், பிரமோத் பாகத் (பேட்மின்டன்), வெள்ளி வென்ற மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்), சிங்கராஜ் (துப்பாக்கி சுடுதல்), வெண்கலம் வென்ற சரத்குமார் (உயரம் தாண்டுதல்), ஹர்வீந்தர் சிங் (வில்வித்தை), மனோஜ் சர்க்கார் (பேட்மின்டன்), ஈட்டி எறிதலில் 4வது இடம் பிடித்த நவதீப் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளுடன் தலா ₹51ஆயிரம் வழங்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கும் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் தலைவர் சாந்திலால் ஜெயின், செயல் இயக்குநர் ஷெனாய், இந்திய பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் தீபா மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.