×

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சீட் இருக்கையில் மறைத்து கடத்த முயன்ற 470 கிராம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் விமானம் நேற்று வந்தது. அதில் வந்த 138 பயணிகளும் விமானத்தை விட்டு இறங்கி சென்றனர். மீண்டும் அந்த விமானம் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட்டு செல்ல வேண்டும். இதற்கிடையில், விமான நிலைய ஊழியர்கள், விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். ஒரு சீட் தூக்கி கொண்டிருந்தது. அதை சரி செய்ய முயன்றனர். ஆனால் அந்த சீட்டுக்கு அடியில் ஏதோ இருப்பது தெரிந்தது. உடனே சீட்டை தூக்கி பார்த்தபோது, வெள்ளை நிறத்தில் 2 பார்சல் இருந்தது. உடனே மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, மெட்டல் டிடெக்டர் மூலம் பார்சல்களை பரிசோதித்தனர்.

வெடி பொருட்கள் எதுவும் இல்லை என தெரிந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், பார்சல்களை பிரித்து பார்த்தனர். அவைகளில் தங்கக்கட்டிகள் இருந்தன. இதையடுத்து 2 பார்சல்களையும் சென்னை விமான நிலைய சுங்க துறையிடம் ஒப்படைத்தனர். அந்த பார்சல்களில் 470 கிராம் தங்க கட்டிகள்  இருந்தன. சர்வதேச மதிப்பு ரூ.23 லட்சம். துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை, கடத்தல் ஆசாமி விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு இறங்கி சென்றுள்ளார் என்பது தெரிந்தது. அந்த சீட்டில் அமர்ந்து பயணம் செய்த பயணி யார் என சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விமானத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்கின்றனர்.

Tags : Dubai ,Chennai , Police have seized 470 grams of gold from a flight from Dubai to Chennai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...