பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி செக்போஸ்ட் பகுதியில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளான சேரம்பாடி காபிக்காடு, செக்போஸ்ட், கோரஞ்சால், அய்யன்கொல்லி, தேவாலா, அத்திக்குன்னு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று மாலை பந்தலூரில் இருந்து சேரம்பாடி, கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி செல்லும் சாலை சேரம்பாடி செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 3 காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியது.
சேரம்பாடி வனச்சரகம் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை நெடுஞ்சாலையை கடக்க செய்து வனப்பகுதிக்குள் விரட்டினர். சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற அரசு பஸ் மற்றும் வாகனங்களை பார்த்த யானைகள் வாகனங்களை தாக்குவதற்கு முயற்சித்தப்போது வேட்டை தடுப்பு காவலர்கள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் காட்டு யானைகளை விரட்டி போக்குவரத்தை சீரமைத்தனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.