×

பொள்ளாச்சி பாலியல் கைதிகளை, உறவினர்களுடன் பேச வைத்த விவகாரம் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு சஸ்பெண்டான சேலம் போலீசார்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சேலம்: மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு 7 போலீசார் சஸ்பெண்டான சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை நிர்வாணமாக்கி அதனை வீடியோ பதிவு செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகியான அருளானந்தம் உட்பட 4 பேர் கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

ஜாமீன் கேட்டு அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதன்படி இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 13ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சேலத்தில் இருந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பும் போது கோவை பீளமேடு அருகே நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உறவினர்களுடன் பேச வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில், அவர்கள் விதிமுறைகளை மீறி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது உறுதியானது. இதனையடுத்து, சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம் உட்பட 7 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து சஸ்பெண்டான 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனர். நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை. நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக் கூடாது என போலீசார் கூறியுள்ளனர்.

அதன்பிறகு தான் பீளமேடு வரை வாகனத்தை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அங்கு போலீசாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர். பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேசி உள்ளனர். பின்னர் பிரியாணி பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pollachi ,Salem ,Mutton Biryani , Pollachi, Sex Prisoner, Mutton Biryani, Suspended
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!