×

‘சென்னை புளியந்தோப்பில் தரமற்ற கட்டுமானம்’: நாமக்கல் தனியார் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு.!

நாமக்கல்: நாமக்கல் பிஎஸ்டி தனியார் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பில் இந்த நிறுவனம்தான் தரமற்ற கட்டிடத்தை கட்டியது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கோலாரம் பகுதியில் பிரபல பிஎஸ்டி தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அரசு ஒப்பந்த பணிகளையும் செய்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான டெண்டரை பெற்றது. இதுபோல சென்னையிலும் பல கான்டிராக்ட்டுகள் எடுத்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம், நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை, நல்லிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டுமான நிறுவனர்களும் அலுவலகத்தில் இருந்தனர். இதேபோல பரமத்திவேலூரை அடுத்த கோலாரத்தில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் தென்னரசு வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக ஆட்சியின்போது இந்த நிறுவனம் கட்டிய பல கட்டிடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில் இந்த நிறுவனம் கட்டிய குடியிருப்பு இடிந்தது. தரமற்ற முறையில் இந்த குடியிருப்பது கட்டப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இந்த குடியிருப்பு கட்டியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது.

Tags : Chennai Puliyanthope ,Namakkal , ‘Non-standard construction in Chennai Puliyanthope’: Anti-corruption police raid Namakkal private construction company.!
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை