சென்னை: தமிழகத்தில் பரவலாக பெய்த கன மழையால் மக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, போரூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், குன்றத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோபிசெட்டிபாளையம், கமுதி, முதுகுளத்தூர், கீழத்தூவல், இராஜபாளையம், கும்பகோணம், அரக்கோணம், ராசிபுரம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. செஞ்சியில் பெய்த கனமழையால் பேருந்து நிலையம் குளம் போல் மாறியது. காந்தி பஜார், கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வனைகள் முறையாக செய்யாததே இதற்க்கு காரணம் என்று பொது மக்கள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே தாளவாடி மற்றும் சுற்று பகுதிகளில் பெய்த கன மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கல்மண்டிபுரத்திலிருந்து சோளகர்தொட்டி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழல்கியதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கனமழை காரணமாக அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காசோளம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.
சேலம் வாழப்பாடியில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் நிரம்பிய சேலத்தாம்பட்டி ஏறிநீர் சிவுதாபுரம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். நெல்லை மாவட்டம் வள்ளியூர், கிழவநேரி, கள்ளிகுளம், பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. வள்ளியூரில் இரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருந்த நீரில் அரசு பேருந்து சிக்கி கொண்டதால் வள்ளியூர், திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெய்த கனமழையால் சாலைகள், பேருந்து நிலையம், சுரங்க பாதைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. பசும்பொன் நகர், நடராஜபுரம் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் நின்று கொண்டே பயணித்தனர். இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.