புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள், 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, இந்த தொகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களை கட்சிகள் நடத்துவதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. மாநில தலைநகரம், பெருநகரங்கள், மாநகராட்சிகளில் இடைத்தேர்தல் நடந்தால், தேர்தல் நடக்கும் தொகுதியில் மட்டுமே நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். அதற்கு ஏற்ப கட்சிகள், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என கூறியுள்ளது.