ஆவடி: திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, நெல்சன் மண்டேலா தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(56). இவரது மனைவி கஸ்தூரி (50). இருவரும் அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர், இருவரும் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 சவரன் நகைகள் ரூ.40ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து யுவராஜ் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.