×

சீனாவுடன் ஏற்பட்ட சிறிய மோதலையடுத்து எல்லையில் பாதுகாப்புகளை அதிகரித்தது இந்திய இராணுவம்: எதிரி நாட்டு படைகள் ஊடுருவலை தடுக்க தீவிர பயிற்சி

பம்லா:சீனாவுடன் சிறிய மோதல் ஏற்பட்டதையடுத்து அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய இராணுவம் பாதுகாப்புக்காக அதிநவீன பீரங்கிகளை நிறுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள பம்லா மற்றும் டவான்செகாரில் உள்ள எங்கெட்சி பகுதியில் இந்திய இராணுவத்துடன் சீன இராணுவம் சிறிய மோதலில் ஈடுபட்டது. இந்திய எல்லைகுட்பட்ட அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதிதான் என்றும் சீனா கூறி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்ற வெங்கையாநாயுடுவிற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அருணாச்சல பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பம்லா என்ற இடத்தில் இந்திய இராணுவம் துருப்புகளையும் பீரங்கிகளையும் நிறுத்தியுள்ளது. எதிரி நாட்டு படைகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக தவாங் எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் இந்திய இராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

எதிரி நாடுகளின் வான்வழி தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த பீரங்கிகள் அருணாச்சல பிரதேச எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். அருணாச்சல பிரதேசத்தில் கடும் பனி பொழிந்து வருவதையும் பொருட்படுத்தாமல் இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள கடும் பயிற்சி மற்றும் அதிரடி நடவடிக்கைகள் கவனம் ஈர்த்துள்ளன. இதனால் இந்திய சீன எல்லைக்கோடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : China , China, Indian Army, Enemy Forces, Intensive Training
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...