×

ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: பண மோசடி வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அவரது மனைவி லீனா பால் ஆகியோர் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரை ஏமாற்றி சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷுடன் நடிகை ஜாக்குலின் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சாட்சியாக அவரை சேர்த்துள்ள அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அவரிடம் முதல் முறையாக விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து மீண்டும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை ஆஜரான ஜாக்குலினிடம் சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த விசாரணையில் சுகேஷின் பண மோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Jacqueline Fernandez , Jacqueline Fernandez
× RELATED ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை...