×

கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ராகுல்நாத் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களிப்பு அளிக்கிறது.

இதில், கோ ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை செய்யப்படுகிறது. இதையொட்டி இந்தாண்டு சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் ஆகிய ஊர்களில் உற்பத்தி செய்த பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரை சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக  வந்துள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மண்டலத்துக்கு ரூ36 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் செங்கல்பட்டு விற்பனை நிலையத்துக்கு ரூ1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் கனவு நினைவு திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் மாதந்தோறும் ரூ300 முதல் ரூ5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு 11 மற்றும் 12வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30% வசதியுடன் அரசு ஊழியர்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : KO Optex , Go Aptex Diwali Special Sale
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...