நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய வந்திருந்த நிலையில் விஜய்வசந்த் எம்.பி.யின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், சமூக வலைதள பக்கங்கள் சமூக விரோதிகளால் முடக்கப்பட்டது. அவரது சமூக வலைதளங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என எம்பி அலுவலக தரப்பில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘‘விஜய்வசந்த் எம்.பி.யின் ட்விட்டர் கணக்கில் இருந்து தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், தங்களது கணக்கை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டு ட்விட்டரில் இருந்து அனுப்புவது போன்று யு.எஸ். முகவரியில் இருந்து எஸ்எம்எஸ் வந்துள்ளது.
அது ட்விட்டரில் இருந்து அனுப்புவது போன்றே அனுப்பியுள்ளனர். அதனை உறுதி செய்ய கே.ஒய்.சி விவரங்களை கேட்டதால் விஜய்வசந்த் எம்.பி தரப்பில் அனுப்பியுள்ளனர். அடுத்த சில நொடிகளில் ட்விட்டர் கணக்கு முடங்கியது. தொடர்ந்து இன்ஸ்டாகிராம், இ-மெயில் போன்றவையும் முடங்கியது. தொடர்ந்து அந்த தரப்பில் இருந்து எஸ்எம்எஸ் வந்து கொண்டிருப்பதாகவும், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்த பின்னர் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எம்.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை போன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் எம்.பி.யின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்கு திட்டமிட்டு முடக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ேநாக்கம் ஏதேனும் உள்ளதா என்று கட்சியினர் மத்தியில் சந்தேகம் எழுந்தது. அதே வேளையில் நேற்று மதியம் முதல் விஜய்வசந்த் எம்.பி.யின் ட்விட்டர் கணக்கு செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் இ-மெயில் போன்றவை தொடர்ந்து முடங்கியிருந்தது.