சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியின்போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது சோதனை நடந்து வருகிறது. தங்களை தற்காத்து கொள்வதற்காகவும் தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அதிமுக தலைவர்கள் இப்போது கவர்னரை சந்திக்கின்றனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கவர்னரை சந்தித்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். அது மட்டுமல்ல, பொது பிரச்சனைக்காக கவர்னரை சந்திக்காத முன்னாள் முதல்வர் தங்களை பாதுகாத்திடவே கவர்னரை சந்திக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது. இவ்வாறு முத்தரசன் கூறினார்.