சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேரிடருக்கு முன்னரும், பேரிடரின் போதும் பேரிடருக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைகள் மற்றும் பேரிடரின் போது பல்துறை அலுவலர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள ஏதுவாக பல்வேறு துறைகளின் தொலைபேசி விவரங்கள் அடங்கிய அவசரகால கையேடு ஆகியவைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் சுப்பையன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை விரைவுபடுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மூலம் பெறப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியரை தயார்படுத்தி உள்ளோம்.
பொதுவாக, மழைவரும் நேரங்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் வீடுகளுக்குள் வருவதும், வீடுகள் இடிவதும் காரணமாகிறது. எதிர்காலத்தில் நீர்வடியாமல் உள்ள இடங்களை கண்டறிந்து எந்தெந்த துறையின் கீழ் வருகிறது என்பதை கண்டறிந்து நிதி ஒதுக்க கோப்புகள் அனுப்பும் படி கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் உடனே வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அதிகாரிகளுக்கும் கூறியுள்ளோம். மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக கண்காணிக்கப்படும்.
சென்னை குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய மழைநீர் வரக்கூடிய தண்ணீரை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து விடுவது தன் மூலம் அதை தடுக்க முடியும். கன்னியாகுமரி, சென்னைக்கு ஒரு வகையான சூழ்நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகள், நீர் நிலைகளில் வீடு கட்டும் போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது காலப்போக்கில் சரி செய்யப்படும். சென்னை மாநகராட்சியில் 690 கிலோ மீட்டர் தூரமுள்ள 4,427 மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. இந்த பணிகள் 4 மாதம் தொடர்ந்து செய்யப்படும். மேலும் வந்த பிறகு மக்களை வீடுகளில் தங்க வைப்பது, அரிசி, பருப்பு வழங்குவது போன்ற பணிகளை குறைத்து தண்ணீர் வராமல் தடுக்கும் பணிகளை செய்யுங்கள் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அந்த பணிகளை சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் செய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.