×

விராலிமலை அருகே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மதகு அணை உடையும் அபாயம்-மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விராலிமலை : விராலிமலை அருகே நீர்த்தேக்க குளத்தின் அணை, மதகுகள் சிதிலமடைந்து உடையும் நிலையில் உள்ளதால் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மதகு அணையை பராமரிக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ளது பேராம்பூர் பெரியகுளம். சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளமும், 15 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். மழைகாலங்களில் கிடைக்கும் நீர் இந்த பெரியகுளத்தில் சேமித்து வைக்கப்படும். இதன்மூலம் அப்பகுதியில் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி விவசாய நிலங்கள் பாசன வசதிக்காக 6 கதவுகள் கொண்ட மதகு அணை கட்டப்பட்டது.

குளம் நிரம்பி வழியும் சூழலில் இந்த மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும். அதேபோல் விவசாயத்திற்காகவும் மதகுகள் அவ்வப்போது திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும். வெளியேறும் உபரிநீரால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் பாசன வசதி பெறும். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த மதகு அணையின் சிமெண்ட் காரைகள் உடைந்தும், மதகுகள் மிகவும் சேதமடைந்தும் கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாசன விவசாயிகளிடம் வேதனை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு மதகுகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் வரும் காலங்களில் விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மதகு அணையை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் புதிய அணை கட்டிக்கொடுக்க வேண்டும். அல்லது தற்காலிகமாக மராமத்து பணி மேற்கொண்டால் அப்பகுதியில் விவசாயம் காக்கப்படும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்தினால் எப்போது வேண்டுமானாலும் மதகுகள் இடிந்து விழுந்து குளத்து நீர் முழுவதுமாக வெளியேறி அப்பகுதி விவசாய நிலங்களை அழித்து விடும் அபாயம் உள்ளது.எனவே விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு நீர்தேக்க குளத்தின் மதகு அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags : Madaku Dam ,Viralimalai , Viralimalai: The dam of the reservoir near Viralimalai is in a dilapidated condition and the Tamil Nadu government is wartime.
× RELATED விராலிமலை ஊராட்சிக்கு இறந்தவர்களின்...