மாமல்லபுரம்: மாமல்லபுரம், உலக அளவில் புராதன சின்னங்களுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இந்த புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள, புராதன சின்னங்களை மத்திய தொல்லியல் துறை நிர்வகிக்கிறது. இங்கு வானிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்கரை கோயில் வளாகத்தில் ஒரு கருவி அமைக்கப்பட்டது. அந்த கருவியை, பராமரிக்காமல் விட்டதால் இயங்காமல் பழுதானது.
இதையடுத்து, இங்கு ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேஷன் என்றழைக்கப்படும் சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி வானிலை கருவி கடற்கரை கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது, மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஆட்டோமேடிக் வெதர் ஸ்டேஷன் என்றழைக்கப்படும் சூரிய ஒளியில் இயங்கும் தானியங்கி வானிலை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த, கருவி மூலம் நகரின் மழைளவு, காற்றின் வேகம், காற்றில் உள்ள ஈரப்பதம், நகரின் வெப்பநிலை ஆகிய முக்கிய தகவல்களை அறியலாம்.
தொல்லியல் துறை தலைமையக இணைய தளம், தமிழக வானிலை ஆய்வுமைய இணைய தளம் மூலம் இப்பகுதியில் நிலவும் வானிலை பற்றிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள முடியும் என்றனர்.