தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையத்திற்கு இதுவரை ரூ4.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய அதிமுக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இந்த ஆணையம் இதுவரை 30 கட்ட விசாரணைகள் நடத்தியுள்ளது. இந்த ஆணையத்திற்கு விசாரணைக்காக இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார். அதற்கு இந்த ஆணையத்தின் விசாரணைக்காக இதுவரை ரூ4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 செலவு செய்யப்பட்டுள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.