×

காத்திருப்பவன் ஏமாளி... கைப்பற்றுபவன் புத்திசாலி அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்: பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு ஓபிஎஸ், இபிஎஸ்சை வம்புக்கு இழுக்கிறார்

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானர். அப்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் முறையாக சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். தொடர்ந்து 17ம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்போது, அவர் தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென்று அதிமுக கொடியை ஏற்றினார். மேலும், அவர் அதிமுக பொன்விழா ஆண்டு தொடக்க விழா நாள் கல்வெட்டை திறந்து வைத்தார்.

அதில் அதிமுக பொது செயலாளர் வி.கே.சசிகலா என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘கல்வெட்டில் சசிகலா தனது பெயர் போட்டால் மட்டுமே கட்சியின் பொது செயலாளர் ஆக முடியாது. கட்சி அதற்கான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார். இந்த நிலையில் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு வி.கே.சசிகலா கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற ஜெயலலிதா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம். பகை வெல்வோம். “தமிழ்ச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்குப் பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா. மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அதிமுக நாடாண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். எத்தனை, எத்தனை இன்னல்களைக் கடந்த ஜெயலலிதா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம்.

நீங்கள் நினைப்பது புரிகிறது. கழகம் காக்கப்படும். காலத்திற்காய்க் காத்திருப்பவன் ஏமாளி. காலத்தைக் கைப்பற்றுபவன் புத்திசாலி. ஜெயலலிதாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ. கரம் கோர்ப்போம். அம்பாய்ப் பயணிப்போம். இலக்குகளைத் தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம். எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டுவர சூளுரைப்போம். அஞ்சாது உறுதியேற்போம். மக்களுக்காய் நாமிருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள்.

ஆதிக்கம் ஒரு நாள் மக்களிடம் மண்டியிடும். ஜெயலலிதா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம். வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும். தலைவி புகழ் நிலைக்கட்டும். பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது. கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது என்று சசிகலாவுக்கு ஏற்கனவே பதிலடி கொடுத்து இருந்தனர். இந்நிலையில் தொண்டர்களுக்கு சசிகலா நேற்று எழுதிய கடிதத்தில், அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை மீண்டும் வம்புக்கு இழுக்கவே, தன் அறிக்கையில் சசிகலா பயன்படுத்தி இருக்கிறார் என்று அதிமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த கடிதத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சியடைந்து ள்ளனர்.


Tags : Emali ,Sasikala ,AIADMK ,OBS ,general secretary , Waiter Emali ... Capturer Sasikala Sudden letter to clever AIADMK volunteers: OBS, EPS pulls into a frenzy
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...