சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளை வேகப்படுத்தும் வகையில் நீர்வளத்துறைக்கு தனியாக செயலாளரை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கட்டுபாட்டில் தான் நீர்வளத்துறையின் பொறுப்பு உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் நீராதாரங்களை பெருக்கும் நடவடிக்கையை திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட நீர்வளத்துறையின் திட்டப்பணிகளை வேகப்படுத்தும் வகையில் நீர்வளத்துறைக்கென தனியாக செயலாளர் நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்ட உடன் இந்த துறைக்கு தனியாக செயலாளர் நியமிக்கப்படவிருக்கிறார் என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.