சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை கேளம்பாக்கத்தில் தான் நடத்தும் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது சிவசங்கர் பாபா மீதான புகாராகும். இது தொடர்பாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த ஜூன் 16ம் தேதி டெல்லியில் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிரான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளியில் படித்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். அதில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பேரையும் அவர் அடையாளம் காட்டியுள்ளார். இதன் அடிப்படையில் அந்த 3 பேரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டுகிறார்கள். அவர்களை பிடிக்க பல்வேறு இடங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.