மதுரை: வரலாற்று ஆவணங்களை ஏலம் விடும் பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு, சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன், ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு எழுதியுள்ள கடிதம்: தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப்போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப்போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும். நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.
இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால், அதை பணமாக்கப்போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படி தரப்படும் உரிமைகளில் தனி உரிமைகளும் அடக்கம். இது அரசின் நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக பணம் பண்ணும் பிரச்னை அல்ல. சமூகத்தின் மீது நீண்டகால விளைவுகளை உருவாக்குகிற பிரச்னை. கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக்கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.