×

பஞ்சாப் மாநிலத்தில் குடிநீர் கட்டணம்: 1,168 கோடி தள்ளுபடி: அமைச்சரவை முடிவு

சண்டிகர்:  பஞ்சாப் மாநிலத்தில்  நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இங்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் வகையில் அரசு பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. நேற்று முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் நகர மற்றும் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்கியுள்ள குடிநீர் வினியோக கட்டணத்தின் நிலுவை தொகை மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் சரண்ஜித் சிங் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் அனைத்து நகரங்களில் உள்ள 700 கோடி குடிநீர் கட்டணத்தை  அரசு தள்ளுபடி செய்கின்றது. மேலும் கழிவு நீர் இணைப்பு கட்டணத்தையும் அரசு செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் நிலுவையில் உள்ள மின்சார கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகின்றது. இதன் மொத்த மதிப்பு சுமார் 1,168 கோடியாகும். இந்த நடவடிக்கை மூலமாக அரசுக்கு 1800 கோடி கூடுதல் சுமை ஏற்படும்” என்றார்.

Tags : Punjab , Punjab, drinking water charges, discounts
× RELATED டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்