×

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 126 இடங்கள் அதிக பாதிப்பானவை: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 126 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடிய இடங்களாக அறியப்பட்டுள்ளது என கலெக்டர் ஆர்த்தி கூறினார். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது. பின்னர், கலெக்டர் ஆர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது. அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள், செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். இடர்பாடுகளின் போது தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் என்ன, முதலில் உதவி செய்பவர்கள் பயிற்சி அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 126 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடிய இடங்களாக அறியப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரங்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

வடகிழக்கு பருவமழையின்போது மீட்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்த குழுக்களில் 11 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இக்குழுக்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் குறித்த விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு, மழையின்போது, அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டும்.  அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் அவசர தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களும், பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருட்களை முன்கூட்டியே கொள்முதல் செய்ய வேண்டும். செல்போன் நிறுவனங்களின் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் என சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

Tags : Northeast Monsoon Preparation Consultative Meeting ,Kanchipuram district , Northeast Monsoon, Consultative Meeting
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...