×

சிகிச்சைக்கு பிறகு அலுவலகம் வந்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மீண்டும் பணியை தொடங்கினார்: போலீசார் உற்சாக வரவேற்பு

சென்னை: நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வழக்கம் போல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார். அப்போது அலுவலகம் வந்த கமிஷனருக்கு போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை மதியம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு அதிகாரிகள், கமிஷனரை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி அளித்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

அங்கு கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த 2 அடைப்புகளும் சரிசெய்யப்பட்டது. பின்னர் 3 நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை நல்ல உடல் ஆரோகியத்துடன் சங்கர் ஜிவால் வீடு திரும்பினார். பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை வழக்கமாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் பூங்கொத்து கொடுத்து அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதைதொடார்ந்து போலீஸ் கமிஷனர் தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.

Tags : Police Commissioner ,Shankar Jival , Police Commissioner Shankar Jival came to the office after treatment and resumed work: Police enthusiastic welcome
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...