நெல்லை: மேலப்பாளையம் ரெக்ரியேசன் கிளப் சார்பில் மாநில அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி எம்ஆர்சி பூப்பந்தாட்ட மைதானத்தில் நடந்தது. போட்டி துவக்க விழாவுக்கு பூப்பந்தாட்ட கழக மாவட்ட தலைவர் பஷீர்அலி தலைமை வகித்தார். மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், மதுரை விமான நிலைய ஓய்வுபெற்ற அதிகாரி பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பூப்பந்தாட்ட கழக துணைச் செயலாளர் வெள்ளபாண்டியன் வரவேற்றார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 13 அணிகள் பங்கேற்றன.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில் நெல்லை பூப்பந்தாட்ட கழக செயலாளர் கண்ணன், எம்ஆர்சி செயலாளர் மனோகர், பொருளாளர் மஸ்தான், மேலப்பாளையம் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் அமானுல்லா, மேலப்பாளையம் உடற்கல்விஅலுவலர் சாகுல்அமீது, ரம்சான்அலி, மாடசாமி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மாலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ., பரிசு வழங்கினார்.