பழநி: தொடர் விடுமுறையின் காரணமாக பழநி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக வாரத்தின் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியது. இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறை நாள் என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனால் பழநி கோயிலில் நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வின்ச் மற்றும் ரோப்காரில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்று வட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அடிவார பகுதியில் வணிகர்களுக்கு நல்ல வியாபாரம் நடந்தது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.