புதுடெல்லி: ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 10 மாதங்களாக டெல்லியின் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை இங்கு லக்பீர் சிங் (35) என்பவர், கை, கால்களை வெட்டி கொல்லப்பட்டு, போலீஸ் தடுப்பில் கட்டப்பட்டு கிடந்தார். சீக்கிய புனித நூலை களங்கப்படுத்தியதால் அவரை கொன்றதாக நிஹாங் சீக்கிய அமைப்பை சேர்ந்த சரப்ஜித் சிங் என்பவர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படுகொலை தொடர்பாக நிஹாங் அமைப்பை சேர்ந்த நரைன் சிங், கோவிந்த்பிரீத் சிங், பகவந்த் சிங் என்ற மேலும் 3 பேர் போலீசில் சரணடைந்தனர். அவர்களை நிஹாங் அமைப்பை சேர்ந்தவர்கள் மாலை போட்டு அழைத்து வந்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.