திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில்வே கேட் அருகே திருத்தணி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கத்திகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், திருத்தணி டேங்க் மற்றும் ஆச்சாரி தெருவைச் சேர்ந்த சந்துரு(18), சர்க்கரைசெல்வம்(20), புருஷோத்தமன்(25) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து கத்தி மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள் 3 பேரும் கஞ்சா போதையில் கடந்த இரண்டு மாத்திற்கு முன்பு ராணிப்பேட்டை, குருவராஜப்பேட்டை அருகே தினகரன்(25) என்பவரை வெட்டி விட்டு தப்பியுள்ளனர். அதேபோல், கடந்த 13ம் தேதி நேரு நகர் சேர்ந்த அபூபக்கர்(24), அருண்குமார் ஆகிய இருவரும் கஞ்சா விற்பதை போலீசாரிடம் தெரிவித்தால், இவர்கள் 3 பேரும் அவர்களின் வீடுகள் தேடிச்சென்று கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதுதவிர நேற்று முன்தினம் நேருநகர் சையத் பாபு என்பவரையும் கத்தியால் வெட்ட முயன்றதும் தெரியவந்தது.