×

குறைந்து வரும் விவசாய பரப்பளவு வானம் பார்த்த பூமியில் மாற்று விவசாயம் அவசியம்: விவசாயிகளிடம் விழிப்புணர்வை வேளாண்மை துறை ஏற்படுத்துமா?

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் குறைந்த நீர் தேவையுள்ள மாற்றுப்பயிர் விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3லட்சத்து 70ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக 1லட்சத்து 5ஆயிரம் ெஹக்டேர் பரப்பில் மட்டுமே தொடர்ந்து விவசாயம் நடைபெறுகிறது. இதில் நெல் 80ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு சுமார் 4ஆயிரம் ஹெக்டேரிலும், வாழை 3ஆயிரம் ஹெக்டேரிலும், நிலக்கடலை 3ஆயிரத்து 500ஹெக்டேரிலும், காய்கறிகள், சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் எஞ்சிய நிலத்திலும் பயிர் செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை கண்மாய்கள் 968, ஒன்றிய கண்மாய்கள் 4ஆயிரத்து 871 உள்ளன. மாவட்டத்தில் உள்ள 90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளன. 80ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் செய்யப்பட்டு வந்த நெல் விவசாயம் என்பது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் 62 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டு 64 ஆயிரம் ஹெக்டேர், 2017ம் ஆண்டு 69ஆயிரத்து 200 ஹெக்டேர், 2018ம் ஆண்டு 72ஆயிரத்து 154 ஹெக்டேர், 2019ம் ஆண்டு 60ஆயிரம் ஹெக்டேர், 2020ம் ஆண்டு 76 ஆயிரத்து 971 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். ஆனால் அதிக நீர் தேவையுள்ள பயிர்களான நெல், கரும்பு உள்ளிட்டவைகளை பயிரிட்டு விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மாவட்ட நீர் ஆதாரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றுப்பயிர் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தினாலும் வேளாண்மை துறை அதில் அக்கறை காட்டவில்லை. சில விவசாயிகள் மாற்று விவசாயமாக மரவள்ளி, சக்கரைவள்ளி, கருணைக்கிழங்கு விவசாயம், காளான் உற்பத்தி உள்ளிட்டவைகள் செய்து அதில் லாபம் அடைந்து வருகின்றனர். மரவள்ளிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு அதிகமான நீர் பாய்ச்ச தேவையில்லை. இதுபோல் காளான் வளர்ப்புத்தொழிலையும் லாபகரமானதாய் செய்து வருகின்றனர். இவைகள் மட்டுமின்றி நீர் குறைவாக பயன்படுத்தப்படும் மாற்றுப்பயிர்கள் பயிர் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்து விவசாய ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. மழை பெய்யவில்லை, போதிய நீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை, இதனால் லாபமில்லை என்பதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. நீர் தேவை குறைவான பயிர்களே இம்மாவட்டத்திற்கு ஏற்றதாகும். அதுபோன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மழை குறைவான மாவட்டங்களில் நீர் பற்றாக்குறையால் மரவள்ளி உள்ளிட்ட மானாவரி பயிர்கள் பயிரிடப்படுகிறது. மாற்று விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். நீர் தேவை குறைவான பயிர்களே
இம்மாவட்டத்திற்கு ஏற்றதாகும். அதுபோன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிட்டால் நஷ்டம் ஏற்படாது.

Tags : earth , Decreasing, agricultural area, sky-scraping land, alternative agriculture
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...